தன்னைத் தானே அறிவதன் முதல் படியான SWOT Analysis குறித்து இப்பகுதியில் கண்டோம். சுயபரிசோதனையையும், சுயமுன்னேற்றத்தை ஊக்குவிக்கும் இன்னொரு முறைதான் ஜோஹாரி சாளரம் (JOHARI Window). தன்னைத் தான் அறிந்து கொள்வதோடு நின்று விடாமல், குழுவினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும்கூட உதவி புரிவது இந்த உருமாதிரி(Model).
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உளவியல் மருத்துவர்களாகிய ஜோசப் லுஃப்ட் மற்றும் ஹாரி இங்காம் ஆகிய இருவராலும் உருவாக்கப்பட்ட மாதிரி(Model)ஆகிய இது இருவருடைய பெயர்களையும் தாங்கி 'ஜோஹாரி சாளரம்' என்று பெயரிடப்பட்டது. இக்கட்டமைப்பினை 'தன்னுணர்வுக்கான வெளிப்பாடு மற்றும் பின்னூட்ட மாதிரி' (Disclosure/Feedback Model for Self Awarness) என்றும் அழைக்கின்றனர்.
இக்கட்டமைப்பு மிகவும் எளிமையான ஒன்று. இதைப் புரிந்து கொள்வது மற்றும் பயன்படுத்துவது மிகவும் சுலபமான காரியம். ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழுவினைப்பற்றிய தகவல்களின் அடிப்படையை, நிலைகளை விளக்குவது இந்தக் கட்டமைப்பு. ஒருவருடைய உணர்வுகள், அனுபவம், பார்வைகள் அல்லது கோணங்கள், குணங்கள், திறமைகள், தூண்டுதல்கள், நோக்கங்கள் இவை பற்றிய ஒரு பார்வையினை, புரிந்துணர்வைத் தர உதவும் கருவியாக இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது.
இந்த சாளரம் நான்கு பாகங்களை உடையது. தான் மற்றும் பிறர் என்று இரண்டு பகுதிகளைக்கொண்டு மதிப்பீடு நடைபெறுகிறது. தனக்குத் தெரிந்தவை, தெரியாதவை, பிறருக்குத் தெரிந்தவை, தெரியாதவை என்று மொத்தம் நான்கு கூறுகளாக இது பிரிக்கப்படுகிறது.
|
திறந்த வெளிப்பகுதி |
குருட்டுப்பகுதி |
|
மறைவுப்பகுதி
|
இருண்ட பகுதி |
ஒருவரைப்பற்றிய தகவல்களில் தமக்கும் தெரிந்த, பிறர்க்கும் தெரிந்த பொதுவான பகுதியை நாம் திறந்த வெளிப்பகுதி என்கின்றோம். எடுத்துக்காட்டாக ஒருவரது பெயர், அவரது படிப்பு, நிறம், உயரம், அவர் இதுவரை தம்மைப்பற்றி தமது குழுவினருக்கு வெளிப்படுத்திய தகவல்கள் இவை எல்லாம் திறந்த பகுதியின் கீழ் வரக்கூடியவை.
ஒருவர் தம்மைப்பற்றி அறியாத, ஆனால் பிறரால் அறியப்பட்ட அவர்குறித்த தகவல்களை குருட்டுப்பகுதிக்குக் கீழ் வகைப்படுத்தலாம். ஒருவரது பாணி (Mannerism), அவரது உச்சரிப்பின் விதத்தில் உள்ள நிறை அல்லது குறைகள் இவற்றினை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
மறைவுப்பகுதியில் கீழ், ஒருவர் தன்னைப்பற்றி அறிந்த ஆனால் பிறருக்கு வெளிப்படுத்தாத தகவல்கள் அடங்கும். ஒருவர் நன்கு பாடத்தெரிந்தவராக இருக்கலாம். ஆனால் கூச்சம் காரணமாக அவர் அதைத் தமது குழுவினரிடம் வெளிப்படுத்தாமல் இருக்கக் கூடும். தமக்கு இருக்கும் குறிப்பிட்ட சந்தேகங்கள், அச்சங்கள் குறித்து அவர் வெளியில் கூறாமல் இருக்கலாம். அவை வெளிப்படும்வரை அவை மறைவிலேயே இருக்க நேரிடுவதால் இப்பகுதியை மறைவுப்பகுதி என அழைக்கிறோம். பொதுவாக மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர்களது மறைவுப்பகுதி பெரிய அளவை உடையதாக இருக்கலாம்.
ஒருவர் தன்னைப்பற்றி அறியாதவை, பிறராலும் நோக்கப்படாதவை அவருடைய இருண்ட பகுதியில் அடங்கும். ஒருவர் ஒரு குறிப்பிட்ட சூழலில் எப்படி நடந்துகொள்வார் என்று அவர் அச்சூழலை எதிர் கொள்ளாதவரை அவருக்கும் தெரியாது, பிறருக்கும் தெரியாது அல்லவா? ஒருவரது ஆழ்மனப் பாதிப்புகள், அவருள்ளே அவரே அறியாமல் மறைந்து கிடக்கும் திறமைகள் இவை இருண்ட பகுதிக்கான சில எடுத்துக்காட்டுகள். மனக்கோளாறுகள் உடையவர்களுக்கு இப்பகுதி மிகவும் பெரியதாக இருக்கக் கூடும்.
மேலே கூறிய நான்கு பகுதிகளில், திறந்த வெளிச் சதுரமானது பெரியதாக இருப்பது ஒருவர் செயல்திறனை, அதிகரிக்கச் செய்வதற்கு மிக மிகஅவசியம். அதாவது ஒருவருடைய இருண்ட பகுதி, மறைவுப்பகுதி மற்றும் குருட்டுப் பகுதி ஆகியவற்றைச் சுருக்குகையில், திறந்த வெளிச் சதுரமானது பெரியதாகிறது. மிகவும் திறமையான, வெற்றிகரமான மனிதர்களின் வாழ்க்கையை உற்றுக்கவனித்தால் அவர்கள் தமது திறந்த வெளிச் சதுரத்தை விரிவாக்கத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்திருப்பதை நாம் உணர இயலும்.
இந்த திறந்தவெளிப்பகுதியை விரிவாக்குவது எப்படி? அதாவது மற்ற சதுரங்களைச் சிறிதாக்குவது எப்படி? கேளுங்கள், சொல்லுங்கள், தேடுங்கள் என்பதுதான் இதற்கான தாரக மந்திரம்.
குருட்டுப் பகுதியைத் திறக்கும் சாவி - 'கேளுங்கள்':
உங்களுக்கு வேண்டியவர்கள், அதாவது நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், மேலதிகாரிகள், உங்கள் வழிகாட்டி முதலியவர்களிடம் உங்கள் செயல்பாடுகள் குறித்த பின்னூட்டத்தினைக் கேட்டறிதல், உங்களுக்குத் தெரியாத தகவல்கள், விஷயங்கள் முதலியவற்றைக்குறித்த சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளுதல் உங்களது குருட்டுப்பகுதியினைச் சிறிதாக்க உதவுகிறது. ஆனால், பின்னூட்டத்தைச் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளத் தெரியும் மனப்பக்குவம் உங்களுக்கு இருப்பது மிக அவசியம். விமரிசனம் உங்கள் குறைபாடுகளைக் களைய உதவும் சிறந்த சாதனம். பிறர் தங்களைக் குறித்து எதுவும் சொல்லக்கூடாது, குறை காணக்கூடாது என்ற மனநிலை இருப்பவர்கள் வளர்ச்சியடைவது கடினம். திறந்த மனதுடன் தம்மைக்குறித்த விமரிசனங்களைக் கேட்டு, தன்னைத் திருத்திக்கொள்ளக் கூடியவர்கள் தமது பணியினை மென்மேலும் சிறந்த முறையில் செய்வது உறுதி.
'சொல்லுங்கள்'- உங்கள் மறைவுப்பகுதியை மறைய வைக்கும் மந்திரம்: தமது உணர்வுகள், தமது திறன்கள், அனுபவங்கள், அறிவு முதலியவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளுகையில் ஒருவரது மறைவுப்பகுதி சுருங்குகிறது, உங்களுக்கும் பிறருக்கும் தெரிந்தவை அதிகரிக்கிறது. உங்கள் திறமையைப் பிறர் அறியச் செய்கையில் உங்களுக்கான வாய்ப்புகள் கூடுகின்றன. அது மட்டுமல்ல, உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை மற்றவர் செய்கிறார் என்று கொள்வோம். அதை நீங்கள் மனதிற்குள் புதைத்து வைத்தால் மீண்டும் மீண்டும் அவர் அத்தவறைச் செய்ய வாய்ப்புண்டு. அதை வெளிப்படையாகச் சொல்லுவதன் மூலம் அவர் அதைச் செய்யாமல் இருக்க வாய்ப்புண்டு. அதே போல், உங்கள் விருப்பு வெறுப்புகள், உங்களுக்குப் பிடித்தமான வேலை வாய்ப்புகள் இவற்றை வெளிப்படையாகச் சொல்வதன் மூலம் உங்களுக்குப் பிடித்தமான செயல்கள் நடைபெறவும், வாய்ப்புகள் அதிகரிக்கவும் கூடும். உங்கள் அறிவையும் திறமையையும் பிறரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் (நினைவிருக்கட்டும், நீங்கள் செய்ய வேண்டியது தற்புகழ்ச்சியல்ல, உங்கள் உடன் இருப்பவர்களுக்கு நீங்கள் உதவி செய்தல் வேண்டும்.) உங்கள் மதிப்பு உயருகிறது. நீங்கள் வெளிப்படையானவராக இருப்பது, பிறர் மீது உங்கள் தாக்கம் ஏற்பட உதவுகிறது.
தேடுங்கள் - உங்களுக்காகப் புதிய கதவுகள் திறக்கக்கூடும்: புதியனவற்றுக்கான தேடல், எதையும் ஆராய்ச்சிக்கோணத்தில் அணுகுதல், துணிந்து செயலாற்றல், மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளுதல் இவை எல்லாம் உங்களிடம் புதைந்து கிடக்கும் சக்தியை வெளிக்கொணரக்கூடும். பலவிதமான சூழல்களையும் எதிர்கொள்ள முயலுதல், உங்கள் ஆழ்மனத்தில் இருக்கும் அச்சங்கள், உங்களிடன் நீங்களே அறியாது மறைந்திருக்கும் திறமைகள் இவற்றை வெளிப்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுடன், உங்களுக்கு மன நிறைவையும் ஊட்டும். இதனால் உங்கள் இருண்ட பகுதி வெளிச்சத்திற்கு வருகிறது.
மொத்தத்தில் நீங்கள் ஒரு புதிய மனிதராக, வெளிப்படையானவராக, செயல்திறனும் மிக்கவராக மாற, நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருத்தல் அவசியம். உங்களை நீங்களே அறியவும், பிறருக்கு வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கின்ற இந்த 'ஜோஹாரி சாளர'க் கட்டமைப்பு, உங்கள் தன் விழிப்புணர்வு (Self Awareness) அதிகரிப்பதற்கும் அதன் மூலம் பொன்னான வாய்ப்புகளைப் பெற்று முன்னேற்றப்பாதையில் வெற்றி நடை போடவும் உதவுகின்றது.
.






